"அடுத்த 2 நாட்களுக்கு.." இரவில் தமிழகத்திற்கு வரும் புது பிரச்சினை.. அலர்ட் தரும் வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில், வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கடந்த டிச. மாதம் நல்ல மழை பெய்தது. டிச. முதல் வாரத்தில் சென்னையில் கனமழை கொட்டிய நிலையில், நகரில் பல முக்கிய பகுதிகளிலும் நீர் தேங்கியது.

அதன் பிறகு டிச. இறுதியில் தென்தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
வானிலை: அதன் பிறகு தமிழ்நாட்டில் பருவமழை கணிசமாக முடிந்துவிட்டது. பெரும்பாலான பகுதிகளில் மழை நின்றுவிட்ட நிலையில், இப்போது குளிர் தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மூடுபனி அதிகமாக இருக்கிறது. இதனால் காலை நேரங்களில் வாகனங்களை ஓட்டுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜன.16) மற்றும் நாளை (ஜன. 17) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
எப்படி இருக்கும்: வரும் ஜன. 18 முதல் ஜன. 20 வரையிலான காலகட்டத்தில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், ஜன. 21 மற்றும் ஜன. 22 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: இன்று (ஜன. 16) மற்றும் நாளை ஜன.17 தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் எங்கும் பெரியளவில் மழை பெய்யவில்லை. மேலும், தற்போதைய வானிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications