மீண்டும் மிரட்டும் மிக கனமழை..நவ.21,22ல் வட தமிழகத்தில் அடி வெளுக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு மழை ஓய்வெடுத்துள்ளது.
வெள்ள நீர் வடியும் வரை ஓய்வெடுத்து வரும் மழை மீண்டும் தனது வீரியத்தை காட்டப்போகிறது. அதற்குக் காரணம் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலைதான்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடிமின்னலுடன் கனமழை
20ஆம் தேதியன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மிக கனமழை
21ஆம் தேதியன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இதனிடையே சனிக்கிழமை முதல் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications