இடைவிடாது கொட்டும் மழை- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பா? இரு கட்டங்களாக நடத்தப்படுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை இடைவிடாமல் பெய்துவரும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கலாமா? அல்லது இரு கட்டங்களாக நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது மாநில தேர்தல் ஆணையம். தேர்தலை நடத்துவதற்கான துவக்க நிலை பணிகளில் 99 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் படுதீவிரமாக இறங்கி உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோரிடம் அனைத்து அரசியல் கட்சிகளும் விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றன.

மழை வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்
இன்னொரு பக்கம், வடகிழக்கு பருவ மழை தொடர்ச்சியாக வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை கொட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னமும் பல பகுதிகளில் மழை வெள்ள நீர் வடிந்தபாடில்லை. பெரும்பாலான ஆறுகளில் பல ஆண்டுகளுக்கு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

புயல் சின்னங்கள் மிரட்டல்
வெவ்வேறு மாவட்டங்களை இணைக்கக் கூடிய ஆறுகளின் தரைப்பாலங்கள் பல இடங்கள் அடித்துச் செல்லப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவே சில மாதங்களாகும். இந்த நிலையில் ஒரு புயல் சின்னம் உருவாகி கடும் மழையை பொழிந்து விட்டு அது கரையை கடந்த ஓரிரு நாட்களில் அடுத்த புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?
இதனால் டிசம்பர் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த தேர்தல் ஆணையம், தேர்தலை சில வாரங்கள் தள்ளிப்போடலாமா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறது. இது தொடர்பான ஆலோசனைகள் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில், திட்டமிட்டபடி முழுமையாக தேர்தலை நடத்தலாமா? மாநகராட்சியைத் தவிர்த்து விட்டு நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் என இரு கட்டங்களாக தேர்தலை நடத்தலாமா? என அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒத்திவைப்பதா? இரு கட்டங்களாக நடத்துவதா?
இந்த விவாதங்களின் விவரங்கள் தேர்தல் ஆணையத்திடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது தள்ளிப்போடலாமா? இரு கட்டங்களாக நடத்தலாமா? என மாவட்ட ஆட்சியர்களின் கருத்தைக் கேட்டு வருகிறது தேர்தல் ஆணையம். அடுத்த ஓரிரு நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திட்டவட்டமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்கின்றன தலைமை செயலக தகவல்கள்.












Click it and Unblock the Notifications