ராமநாதபுரம் டூ சென்னை வரை கொட்டி தீர்த்த மழை! சேதம் என்ன? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் விளக்கம்
சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், எங்கு பாதிப்பு அதிகம்? சேதம் என்ன என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கடற்கரை ஓரமாக இருக்கக்கூடிய ராமநாதபுரம் தொடங்கி சென்னை வரை மொத்தம் 5-6 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நல்வாய்ப்பாக புயல் கரையை கடக்கமால், கடலிலேயே செல்வதால் நமக்கு பாதிப்பு இல்லை. சில இடங்களில் 20 செ.மீ அளவுக்கும், ஓரிரு பகுதிகளில் 5-10 செ.மீ அளவிலும் மழை பதிவாகி இருக்கிறது. ஆனால், நம்முடைய முதலமைச்சர், புயல் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களுக்கு உள்ளே வந்தால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுமோ? அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால் தான் பெரிய அளவுக்கு உயிர் சேதங்கள் பதிவாகவில்லை. இருப்பினும் 3 பேர் மழையால் உயிரிழந்திருக்கின்றனர். இருவர் சுவர் இடிந்து விழுந்து பலியாகி உள்ளனர். ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 50,000 ஏக்கர் வேளாண் நிலம் நீரில் மூழ்கி இருக்கிறது. 2-3 நாட்கள் கழித்து நீர் வடிந்த பின்னர்தான் சேதத்தின் அளவு என்ன என்பது தெரிய வரும்.
நேற்று இரவு 11 மணியளவில் துணை முதலமைச்சர் நம்முடைய கட்டுப்பாட்டு அறைக்கு வந்திருந்தார். இங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு, பின்னர் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். அங்கு சுரங்கப் பாதையில் மக்கள் இறங்கி விடாமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தார். மழை பாதிப்புகள் தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சிறப்பான முறையில் மேற்கொண்டு இருக்கின்றனர். நேற்றிரவு ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர், நள்ளிரவு சுமார் 1 மணி அளவில்தான் வீட்டுக்கு சென்றார்.
மக்களின் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால்தான் சுவர் இடிந்து உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. கடலோர பகுதிகளில் உள்ள மக்கள், புயல், மழை காலங்களில் முகாம்களுக்கு ஏற்கனவே வந்து தங்கிய அனுபவம் கொண்டவர். எனவே இந்த முறை புயல் மழைக்கு அவர்களாகவே வந்து விட்டார்கள். ஆனால், மற்ற பகுதிகளில் இருக்கும் மக்களை அழைத்து வருவதில் சிக்கல் இருக்கிறது. வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து வர வேண்டிய சூழல் இருக்கிறது. சிலர் முகாம்களுக்கு வராமல் இருந்தார்கள். அப்படி இருந்தவர்கள்தான் உயிரிழந்திருக்கிறார்கள்.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications