ராமதாஸ் பங்கேற்ற பாமக மகளிர் மாநாட்டில் கனமழை.. மேடையை சூழ்ந்த மழைநீர்! தொண்டர்கள் பெரும் அவதி!
மயிலாடுதுறை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாட்டின்போது கனமழை கொட்டித் தீர்த்தது. மாநாட்டு மேடையைச் சுற்றி மழைநீர் சூழ்ந்த நிலையில் பாத்தி கட்டி மழைநீரை வெளியேற்றும் பணியில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலே இருவருக்கும் இடையில் மோதல் இருந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இந்தப் பனிப்போர் உச்சத்திற்கு சென்றது. இதனிடையே நேற்று அன்புமணி தலைமையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அன்புமணி தலைமையிலான பாமகவின் பொதுக்குழு எந்த சிக்கலும் இல்லாமல் நடந்தது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பாக மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. அதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது, பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, அரசு பதவிகளில் பெண்களின் பங்கேற்பு, சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் மது, போதைப் பொருட்களால் ஏற்படும் சீரழிவிலிருந்து பாதுகாப்பது போன்ற முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 14,000 நாற்காலிகள் அமைக்கப்பட்டன. மேலும், குடிநீர், கழிப்பறை வசதிகள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்றும் 1,300 காவலர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாட்டிற்கு வருவோருக்கு வழிகாட்டி பலகைகள், வாகன நிறுத்த வசதிகள் மற்றும் எல்.இ.டி திரைகள் மூலம் நிகழ்ச்சிகளைக் காண வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதி, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வருகை தந்தனர். இதற்கிடையே பாமக மாநாடு நடைபெறும் பூம்புகார் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தொண்டர்கள் அவதி அடைந்துள்ளனர்.
கனமழை கொட்டிய நிலையில் கட்சித் தொண்டர்கள், நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து மறைத்தபடி நின்று கொண்டிருந்தனர். மேலும், பெண்கள் பலரும், மழையில் நனைந்தபடி, மறைவான இடங்களை நோக்கி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கனமழை காரணமாக மாநாட்டு மேடையை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, பாத்தி கட்டி, மழைநீரை வெளியேற்றும் பணியில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர். கனமழை காரணமாக பாமகவின் இந்த மகளிர் மாநாட்டில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.












Click it and Unblock the Notifications