வலு குறைந்து கேரளாவிற்குள் கால் பதித்தது கஜா.. இடுக்கி மாவட்டத்தில் கன மழை
Recommended Video
சென்னை: கஜா தீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறி பின்னர் மேலும் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கேரளாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர், புவியரசன் இன்று காலை 10.30 மணிக்கு, நிருபர்களிடம் கூறுகையில்: கஜா அதி தீவிர புயல் இப்போது, தீவிர புயலாக வலு குறைந்து திண்டுக்கல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக தலா 17 செமீ மழை பெய்துள்ளது.
பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தலா 16 செமீ மழை பெய்துள்ளது. நெய்வேலி 14 செமீ, விருத்தாச்சலம், செங்கல்பட்டு தலா 12 செமீ மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் காற்றின், வேகம் குறைந்துள்ளது. காலை 7 மணி நிலவரப்படி 23 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டுள்ளது. நாளை இந்த புயல் காற்றழுத்த மண்டலமாக வலு குறைந்து, அரபிக் கடலுக்கு சென்று சேர்ந்துவிடும்.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில், மழை இருக்கும். திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையம் கணித்தபடியே, இன்று மாலையில், கஜா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கேரளாவிற்குள் காலடி எடுத்து வைத்தது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இம்மாவட்டத்தின் சுற்றுலா தலமான மூணாறிலும் மழை வெளுத்து வருகிறது. நாளை மாலை வரை கேரளாவில் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது.