தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிக கனமழை - டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தமிழகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை போன்ற மாவட்டங்களிலும், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சாலையோர வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
டெல்டா 3 நாட்களுக்கு கனமழை
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களான கடலூர், புதுகோட்டையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.
கனமழை வெள்ளம்
தீபாவளி தினமான நாளை டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோயம்புத்தூர் ,நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம் அரியலூர், பெரம்பலூர் ,திருச்சி ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை
நாளை மறுநாள் 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர் ,பெரம்பலூர் ,சேலம் ,திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அத்துடன் வட மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்கனமழைக்கு வாய்ப்பு
வருகிற 6ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ,கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 7ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூறாவளிக்காற்று வீசும்
இன்று முதல் 5ஆம் தேதி வரை கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 6 மற்றும் 7ம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், வடக்கு கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.