தமிழகத்தில் 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது... உங்க ஊர் இருக்கா
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றினால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றினால் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்தியாவை தாக்கிய 3வது அலை? வெளிவந்த ரிப்போர்ட்.. அடுத்து என்னவாகும்?
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகம் முழுவதும் மழை
நாளைய தினம் 18ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . அதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
லேசானது முதல் மிதமான மழை
ஜூலை 19ஆம் தேதி முதல் கோயமுத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்
வருகின்ற 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட மாநிலங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.
மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கு அறிவிப்பு
வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று முதல் வருகின்ற 21ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல்,மத்திய வங்கக் கடல், கேரளா, லட்சத் தீவு பகுதி, கர்நாடக கடலோரப் பகுதி, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.