2015க்கு பின் பதிவான அதிகபட்ச மழை.. சென்னையில் விடிய விடிய பேய் மழை.. வெள்ளக்காடான சாலைகள்!
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் முழுக்க டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது. தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.

சென்னை
இந்த நிலையில்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை விடாமல் பெய்து வருகிறது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் 120 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

எவ்வளவு
சென்னையில் அதிகாலை 8 மணி நிலவரப்படி 207மிமீ மழை பெய்துள்ளது. 2015க்கு பின் பெய்த அதிகபட்ச மழை இதுதான். 2015ல் சென்னையில் சில இடங்களில் 450 மிமீக்கும் அதிகமாக மழை பெய்தது. அதன்பின் இப்போதுதான் 200 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெய்த மழை அளவிற்கு இரவு முழுக்க விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

எங்கு
சென்னையில் போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

விடிய விடிய
நேற்று இரவில் இருந்து சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் (GRT Grand Backside) மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடானது.

தீவுகள்
பல்வேறு வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்புகள் தீவுகள் போல் மாறியது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வியாசர்பாடி ஜீவா ரயில்வே கேட் பாலம் அடியில்,பெரம்பூர் ரயில்வே சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications