சென்னையில் தொடர் மழை.. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. வடிகாலுக்கு வழியில்லாமல் மக்கள் அவதி
Recommended Video
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கொரட்டூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் புழுதிவாக்கம், மடிப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சென்னை நகர சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்தும் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை கொரட்டூர் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் இரண்டு முதல் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மடிப்பாக்கம்
இதேபோல் சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், மடிப்பாக்கம் ராம் நகர், சாதசிவம் நகர், பெரியார் நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழை நீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படாததால் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கழிவு நீர் புகுந்தது
ஆதம்பாக்கம் காவல்நிலையத்திற்கு மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து புகுந்தது. இதனால் காவலர்கள் மிகவும் அவதியடைந்தனர். அதன்பிறகு மெட்ரோ அதிகாரிகள் வந்து மழைநீரை மின்மோட்டார் வைத்து வெளியேற்றினர்.
கிண்டியில் வெள்ளம்
கிண்டி கத்திபாரா மேம்பால சர்வீஸ் சாலையில் மழை நீர் வெள்ளமாக பாய்ந்தோடியது. இதன்காரணமாக நேற்று வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். கிண்டி, வேளச்சேரி சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மடிப்பாக்கம்
ஆலந்தூர் கண்ணன் காலனி, மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலை, மடிப்பாக்கம்-வேளச்சேரி சாலை, புழுதிவாக்கம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் குளமாக தேங்கியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் இந்த பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
|
போகவே முடியல
இதேபோல் நேற்று தாம்பரம் சாலையில் வெள்ள நீர் பல இடங்களில் தேங்கியதால் வெளியூர் செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்தே சென்றன. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னரே வாகனங்கள் சென்னையை விட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.