தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழை! எங்கெல்லாம் வெளுக்கப் போகிறது தெரியுமா?
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரில் 10 செ.மீ மழையும், சோளிங்கரில் 8 செ.மீ. மழையும், விழுப்புரம், வடபுதுப்பட்டு, ஏற்காடு, ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும், செஞ்சி, பாப்பிரெட்டிப்பட்டி, பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், பொன்னை அணை, தேவாலா, சோலையாறு, மேல் பவானி, வெம்பாக்கம், வால்பாறை, பண்ருட்டி, தஞ்சாவூர், கச்சிராயபாளையம், சூலங்குறிச்சி, கலயநல்லூர், ஆனந்தபுரம், வளவனூர், கோலியனூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கேரளாவில் அதி தீவிர மழை.. இடுக்கி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!. மக்களுக்கு எச்சரிக்கை
18 மாவட்டங்களில் இன்று கனமழை
வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 மாவட்டங்களில் நாளை மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 முதல் 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.