ஆடிவரும் அரபிக் கடல் காத்து.. தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில, தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. கேரளாவின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கன்னியாகுமரிஉள்பட சில பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், "லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. எனவே தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர வெப்பச்சலனம் காரணமாகவும் இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்" என கூறினார்கள்.
இதனிடையே தமிழகத்தின் கோவை, கன்னியாக்குமரி, நாகர்கோவில், மடத்துக்குளம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனிடையே இன்று தமிழகத்தில் வெப்பநிலையை பார்த்தால், திருவள்ளூரில் 107 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும், வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications