கனமழை கவனம்.. மின்சாரம் துண்டிப்பு.. முன்னெச்சரிக்கை அவசியம்.. தங்கம் தென்னரசு விடுத்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மின்தடை ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி,மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்றும் தமிழ்நாட்டின் இதர பிற மாவட்டங்களிலும் மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களிடையே காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையான தளவாட பொருட்கள் மற்றும்உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகள், குடிநீர் விநியோக நிலையங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.
அனைத்து மேற்பார்வையாளர்களும் இதற்கென தனிக்குழு அமைத்து, சேதாரங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 3 லட்சம் மின்கம்பங்கள், 22 ஆயிரம் கி.மீ.மின்கம்பிகள், 18,395 மின்மாற்றிகள் மற்றும் உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications