இடி மின்னலுடன் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. பல ஊர்களில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. செய்யூரில் 4 செமீ மழையும் செருமுள்ளி, பந்தலூர்,கூடலூர், அவலாஞ்சி,கூடலூர் பஜார்,மேல்பவானி, கூடலூர், நீலகிரியில் 1 செமீ மழை பெய்துள்ளது.
வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே - வானிலை ஆய்வு மையம் ஜில் நியூஸ்
மிதமான மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி
28ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29,30ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 1ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
பலத்த காற்று வீசும்
29 ஆம் தேதி குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் செல்ல வேண்டாம்
30 மற்றும் ஜூலை 1ஆம் தேதியன்று இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.