டெல்டா மாவட்டங்களில் விடியவிடிய கனமழை.. பல ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது.. விவசாயிகள் கவலை
சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல இடங்களில் மழை பெய்து வருவதால் பல ஏக்கர் அளவிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்று வலுப் பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
இதுதொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் தமிழகம், கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்லும். கடந்த 24 மணிக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.
ரவுண்டு கட்டிய மழை.. சீர்காழியில் இறங்கிய “பூதம்”! டமால்டுமீல் இடியால் தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்
கனமழை எச்சரிக்கை
மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக அடுத்த 4 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
டெல்டாவில் மழை
அதன்படி நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கின. இரவு முதல் காலை மழை பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வயல்கள், விளைநிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் அவை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மழை அளவு எவ்வளவு?
குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43.6 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. கொள்ளிடத்தில் 31.5 செமீ, சிதம்பரத்தில் 30.7 செமீ, செம்பனார் கோவிலில் 24.2 செமீ, பொறையாரில் 18.3 செமீட்டர், மயிலாடுத்துறையில் 16 செமீ மழை பதிவாகி உள்ளது. மேலும் கனமழையானது இன்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை
இதனால் இன்னும் சில நாட்கள் டெல்டா மாவட்டங்களின் பல இடங்கிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய மழைக்கே பல ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதால் தொடர் மழையால் பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.