அசாம், பீகாரில் வெள்ளம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கேரளாவிற்கு மஞ்சள் அலார்ட்.. வானிலை அப்டேட்
சென்னை: இந்தியாவில் அசாம், பீகார், கேரளாவில் கோடை மழை கொட்டி வருகிறது. இதில் அசாம் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியைில் பீகாரிலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளா மாநிலத்தில் அணைகள் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பெய்த மழையால் ஐபிஎல் பிளேஆப் போட்டிகள் நடக்கும் கொல்கத்தா மைதானம் சேதமடைந்துள்ளது.
இந்தியாவில் மே மாதம் கோடை வெயிலுக்கு பெயர் பெற்றது. இயல்பை விடவெப்பம் அதிகமாக காணப்படும். இருப்பினும் பல மாநிலங்களில் கோடை மழை பெய்து மக்களை குளிர்விக்கும்.
விடுதலையில் பாரபட்சம்.. 6 பேருக்கும் திங்கள்கிழமை தமிழக அரசு கூறும் நற்செய்தி?.. நளினி வழக்கறிஞர்
அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் அசாம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் மழை, வெயில் உள்ளது என்பது பற்றிய முழு விபரம் வருமாறு:
அசாமில் அதிகரிக்கும் பலி
அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 31 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை மழையால் 6,80,118 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் நேற்று 4 பேர் இறந்தனர். இதனால் மொத்த பலி 18 ஆக அதிகரித்துள்ளது.
தொலைதொடர்பு சேவை துண்டிப்பு
அசாமில் நாகோன் மாவட்டத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதன்பிறகு கச்சார் மாவட்டத்தில் 1.77 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 70,233 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்னளர். இதுவரை 282 நிவாரண முகாம்களில் 74,907 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 214 நிவாரண பொருட்கள் வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் ராணுவம், துணை ராணுவப் படைகள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பிரதேசங்களில் உள்ள மாவட்டங்களில் துண்டிக்கப்பட்ட தொலைதொடர்பு சேவைகளை சரிசெய்யும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவுக்கு ‛எல்லோ அலர்ட்’
மேலும் கேரளாவின் 10 மாவட்டங்களுக்கும் நேற்று மழைக்கான ‛எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி, பாம்பிளா அணைகளுக்கான தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணைகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. கல்லார்குட்டி அணையின் நீர்மட்டம் அபாய அளவான 455 மீட்டரை எட்டியதால் அணையில் 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பாம்பிளா அணையில் இருந்து 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் பெரியாற்றின் கரையோரத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேற்குவங்காளத்தில் மழை
மேலும் நேற்று மாலை மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புர்பா பர்தமான் மாவட்டத்தில் செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவரும், நாடியா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவரும் கொல்கத்தாவின் ரவீந்திர சரோபார் ஏரியில் படகு கவிழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் இறந்தனர். போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தா மைதானத்தில் சேதம்
கொல்கத்தாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் மைதானத்தில் சேதம் ஏற்பட்டது. ஹோர்டிங்குகள் மற்றும் பவுண்டரி எல்லையில் உள்ள தடுப்புகள், ப்ரஸ் பாக்ஸின் கண்ணாடிகள் உடைந்தன. செவ்வாய், புதன் கிழமைகளில் ஈடன் கார்டனில் மைதானத்தில் ஐபிஎல் பிளேஆப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியதே சேதத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேதங்கள் சிறியவை தான். இது போட்டியை பாதிக்காது. இன்னும் 2 நாட்கள் உள்ளதால் எல்லாம் சரிசெய்யப்பட்டு விடும்'' என்றார். இதற்கிடையே மைதானத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் நேற்று பார்வையிட்டார்.
பீகாரில் 33 பேர் பலி
இதற்கிடையே பீகாரில் சில நாட்களாக இடியுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 33 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை
அசாம், பீகார், கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நாட்டின் பிற மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் பல இடங்களில் கோடை வெயில் குறைந்து மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை முதல் 3 நாட்கள் ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை
இந்த மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்இந்தியாவில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பதிவாகி இருந்தது. இடுக்கி தொடுபுழாவில் 13 செமீ மழையும், கோழிக்கோடுவில் 9 செமீ, எர்ணாகுளத்தில் 8 செமீ, கோவையில் வால்பாறை 8 செமீ மழையும் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒடிசாவில் வெப்பம்
இருப்பினும் நேற்று ஒடிசாவில் வெப்பம் அதிகரித்து இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி இருந்தது. இந்த மாநிலத்தில் சில இடங்களில் சுமார் 1-3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து இருந்தது. பல பகுதிகளில் இயல்பை விட வெப்பம் கடுமையாக இருந்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சுபர்னாபூரில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து ஜார்சுகுடா மற்றும் சுந்தர்கரில் தலா 44 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பாலசோரில் 40.4 டிகிரி வரை உயர்ந்தது, சராசரியை விட ஐந்து புள்ளிகள். பர்கர் மற்றும் போலங்கிரில் முறையே 43.5 மற்றும் 43.2 டிகிரி பதிவாகியுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் பாதரசம் 37.6 டிகிரி செல்சியஸாகவும், கட்டாக்கில் 37.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.