கட்டுக்கடங்காத டிராபிக் .. தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மொத்தமாக ஸ்தம்பித்தது.. அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் இருமார்க்கத்திலும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படும் காரணத்தால், தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் இருமார்க்கத்திலும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணி வரை செல்லும் ரயிலும், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்தது. இதுபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான மின்சா ரயில்கள் ரத்து காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் தங்களின் பயணத்திற்குச் சொந்த வாகனங்களில் செல்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து போலீசார் கடும் சவாலை சந்தித்தனர்.
வெளியூர் செல்பவர்கள், சென்னைக்குள் செல்பவர்கள் ரயிலுக்கு பதில் பேருந்துகளை நாடுவதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. தாம்பரம் பகுதியில் மக்கள் கூட்டமும் அலைமோதுவது ஒருபுறம் எனில், வாகனங்களும் அதிகமாக செல்வதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. இந்த மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த, கூடுதல் பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பொதுவாகவே தாம்பரத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டால் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.. அந்த வகையில் தான் வார இறுதியான சனிக்கிழமையில் நெரிசல் அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications