சென்னைக்கு திரும்பும் வண்டிகள் சிக்கிடுச்சே.. எஸ்.பி.கோவிலில் 5 கி.மீ தூரத்துக்கு நிற்கும் வாகனங்கள்
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலில் பல கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சனி, ஞாயிறோடு சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேபோல் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கூட்டேரிப்பட்டு, ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இரவு முழுவதும் வாகனங்கள் செல்லும் என்பதால் இன்னும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பதால் விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பாக திருச்சி, சேலம், போன்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப் பாதை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பாக செண்டூர், மயிலம் வழியாகச் சென்று தென்கோடி பாக்கம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம் வந்து சென்னைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications