இஞ்ச் இஞ்ச் ஆக நகரும் வாகனங்கள்.. ஓஎம்ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. காரணம் என்ன?
சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் மெட்ரோ பணிகள் மற்றும் தொடர் மழையால் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஓ.எம்.ஆர். பழைய மாமல்லபுரம் சாலை என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப விரைவுச் சாலை மத்திய கைலாசில் ஆரம்பித்து மாமல்லபுரம் வரை நீண்டு செல்கிறது. சென்னை நகரின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.

இரு பக்கங்களிலும் தலா மூன்று வாகனங்கள் செல்லும் அளவு விசாலமான விரைவுச் சாலை, இரு சர்வீஸ் சாலைகளிலும் தலா இரு வாகனங்கள் செல்லுமளவு வசதி என மொத்தம் 10 வாகனங்கள் விறுவிறுவென பறக்க ஏதுவாக இருந்த அந்த ஓ.எம்.ஆர் சாலை தற்போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
சென்னையில் வாகனங்களின் பயன்பாடு மற்றும் கட்டுமான பணிகளால் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இதனால் சோழிங்கநல்லூர் சிக்னலில் இருந்து அடையாறு மத்திய கைலாஷ் வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நடை மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் என அனைத்துப் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஓஎம்ஆர் சாலையில் பல இடங்களில் சர்வீஸ் சாலைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
இதனால் சோழிங்கநல்லூர் சந்திப்பு, துரைப்பாக்கம் சந்திப்பு, பெருங்குடி சந்திப்பு, திருவான்மியூர் டைட்டில் பார்க் சந்திப்பு, மத்திய கைலாஷ் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பணிக்கு செல்லும் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த சாலையை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வரை ஆகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை முதலே ஓஎம்ஆர் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இஞ்ச் பை இஞ்ச் ஆக வாகனங்கள் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications