பெருங்களத்தூர் டூ வண்டலூர் இடையே கடும் நெரிசல்.. இரணியம்மன் கோவில் பிரச்சனை.. அரசு தலையிட கோரிக்கை
சென்னை: பெருங்களத்தூர் டூ வண்டலூர் இடையே நெரிசல் ஏற்பட்டு வரும் இடம் என்றால், அது இரணியம்மன் கோவில் தான். காலை மற்றும் மாலை நேரங்களில் பெருங்களத்தூரை கடந்து சென்றால், வண்டலூரில் நுழையும் முன்பு கடுமையான நெரிசல் இருக்கும். தீபாவளி பண்டிகையொட்டி பலரும் சொந்த ஊர் செல்கிறார்கள். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள கோயிலை சற்று பின்னால் உள்ள தனியார் ஐடி நிறுவன இடத்தில் மாற்றியமைக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த சாலையில் உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இரணியம்மன் கோயில் தான் காரணமாக இருக்கிறது. இந்த கோயில் என்பது திடீரென உருவானது அல்ல. பல ஆண்டுகளாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பலரும் சொந்த ஊர் செல்லும் நிலையில், பெருங்களத்தூரை தாண்டியதுமே கடும் நெரிசலில் சிக்குவார்கள்.

அதன்பிறகு கோயிலை தாண்டியதும் இயல்பான போக்குவரத்து இருக்கும். இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்பட எந்த வாகனமும் தப்ப முடியாத நிலை தான் இருக்கிறது. அதாவது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு சற்று தள்ளி வரை 5 லேன் இருக்கும் சாலை இரணியம்மன் கோவில் பகுதியில் 3 லேன் ஆகிவிடும். பின்னர் கோவிலை தாண்டியது மறுபடியும் 4 லேனா மாறும். இந்த கோயில் உள்ள இடம் தான் நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. இது ஒருபுறம் எனில், இரணியம்மனை, சாலையில் பயணிப்பவர்களைப் பாதுகாக்கும் தெய்வமாக வழிபடப்படுவதால், தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் இங்கு நின்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதும் நெரிசலுக்குக் காரணமாகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம்.. இரணியம்மன் கோவில் என்பது பெருங்களத்தூர், வண்டலூர் மக்களின் முக்கியமான காவல் தெய்வம் ஆகும். இந்தக் கோயிலை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டன. ஆனால் நடைமுறை செயல்பாட்டில் இன்னும் தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டில், கோயிலுக்கு பின்புறம் உள்ள ஐடி நிறுவனம் புதிய கோயில் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR&CE) 10.4 சென்ட் நிலத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால்,தனியார் நிறுவனம் கொடுக்க முன்வந்த இடத்தில் வீராணம் குடிநீர் குழாய் செல்கிறது. அங்கு கோயில் எழுப்ப இயலாது என கருதிய கிராம மக்கள், குடிநீர் குழாய்க்கு சேதம் ஏற்படாத வகையில் சற்று தள்ளி 15 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அந்த தனியார் நிறுவனம் இந்த இடத்தை ஒதுக்க காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து வருவாய்த் துறையினர் பலமுறை அந்த நிறுவனத்தை அணுகியபோதும், அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு முறையான பதிலும் கிடைக்கவில்லை என்று கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி சொல்லப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி நெடுஞ்சாலை விரிவாக்க பணியும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, பெருங்களத்தூரில் காலை, மாலை நேரங்களில் தினசரி கடுமையான போக்குவரத்து பாதிப்பு தொடர்கதையாக உள்ளது. கோயிலை பின்னால் உள்ள தனியார் ஐடி நிறுவன இடத்தில் மாற்றினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு வரும் என்பதால் தொடர்கதையாக நீடிக்கிறது. அரசு தலையிட்டால் உடனே பிரச்சனைக்கு விடிவு கிடைக்கும் என்பதுடன், நெரிசலுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும். உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.












Click it and Unblock the Notifications