பொங்கல் லீவு முடிந்தது! சென்னைக்கு ரிட்டர்னான மக்கள்! அதிகாலை வரை பெருங்களத்தூரில் டிராபிக் ஜாம்
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மதியம் முதல் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்ததால் பெருங்களத்தூரில் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வேலை, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட வசதிகளுக்காக சென்னையில் லட்சக்கணக்கானோர் தங்கியுள்ளனர். பலர் குடும்பத்துடனும், சிலர் தங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தங்கியுள்ளனர்.

இவர்களில் சொந்த வீட்டை சென்னையில் வாங்கியிருந்தாலும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சொந்த ஊர்களில்தான் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்தன. இதனால் மக்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த விடுமுறையை அடுத்து அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் சொந்த ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் மூலம் சென்றனர். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை நேற்றுடன் முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்குவதால் நேற்று மதியம் முதலே மக்கள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க பலர் சனிக்கிழமையே சென்னை திரும்பினர். இந்த நிலையில் நேற்று காலை முதலே சென்னை திரும்பி வருவதால் திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
பல மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டும் சென்னையை அடைய முடியாமல் பலர் திணறி வருகிறார்கள். சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் தொடங்கிய நெருக்கடி இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோருக்கு நுழைவு வாயிலாக உள்ள பெருங்களத்தூரில் 2 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.












Click it and Unblock the Notifications