கோயம்பேடு டூ வேலப்பன் சாவடி வரை.. சிக்கித் திணறி வரும் வாகன ஓட்டிகள்.. சென்னையில் கடும் நெரிசல்!
சென்னை: சென்னை வானகரம் - கோயம்பேடு சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பி வருவதால் வேலப்பன்சாவடியில் இருந்து கோயம்பேடு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டி அளிக்கப்பட்ட 6 நாட்கள் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பொங்கல் விடுமுறை நிறைவடைந்து ஒரே சமயத்தில் ஏராளமான மக்கள் நேற்று மாலை முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்களும் பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட்டது.
ஒரே நாளில் மக்கள் அனைவரும் சென்னை திரும்பினால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே மக்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே சென்னைக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இதனால் கடந்த 3 நாட்களாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் விடுமுறையின் இறுதி நாளான நேற்றும் ஏராளமானோர் சென்னைக்கு படையெடுத்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் வருகை காரணமாக சிங்கப் பெருமாள் கோயில் பகுதியை கடக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
அதேபோல, சென்னை வானகரம் - கோயம்பேடு சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேலப்பன்சாவடியில் இருந்து வானகரம் வரையும், கோயம்பேடு முதல் நெற்குன்றம் வரையும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர்.
ஆம்னி பேருந்துகள், வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதால், அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகள் பூவிருந்தவல்லி மார்க்கமாக கோயம்பேடு செல்கின்றன.















Click it and Unblock the Notifications