தீபாவளி விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலை!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியூர்களுக்கு கிளம்பி உள்ளனர். இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளை தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் இன்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளியை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சுமார் 2,000 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 4,167 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.
ஏராளமானோர், தங்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர். பேருந்து, ரயில்களில் ஒருபக்கம் கூட்டம் அலைமோதும் நிலையில், கார்களில் ஏராளமானோர் கிளம்பி உள்ளனர். சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதேபோல, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வெளிவட்டச் சாலையில் வரும் வாகனங்களை பூந்தமல்லி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பூவிருந்தவல்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் இருந்து தங்கள் சொந்த வாகனங்களில் செல்பவர்கள், அரசு பேருந்துகளில் செல்பவர்கள் ஒரே நேரத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மறைமலை நகர், ஜி.எஸ்.டி சாலையில் சென்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையிலேயே சிக்கி அணிவகுத்து நின்றுவிடும்.
இதனால் சொந்த வாகனங்களில் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து விட்டு மற்ற வழித்தடங்களை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று விடலாம் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க மீஞ்சூர் - வண்டலூர் பைபாஸ் சாலையில் எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் பயணம் செய்யலாம் எனவும், அதேபோல் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையிலும் சென்று பெருங்களத்தூரை அடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications