ஸ்தம்பித்த தாம்பரம்.. பல்லாவரம், செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் விழி பிதுங்கிய வாகன ஓட்டிகள்
சென்னை: புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தாம்பரத்தில் குரோம்பேட்டை பல்லாவரம் வழித்தடத்திலும், கிளாம்பாக்கம் , கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு வழித்தடத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் வாகனங்கள் நெரிசலில் திணறியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், இன்று சென்னையின் தவிர்க்க முடியாத மையமாக மாறி உள்ளது.ஏனெனெல் தாம்பரத்தை தாண்டாமல் சென்னைக்குள் நுழைய முடியாது என்பது மட்டுமின்றி, சென்னையை விட்டு வெளியேறவும் முடியாது. சென்னை மாநகரின் மிகவும் நெரிசலான சாலையாக தாம்பரம் வழியாக செல்லும் ஜிஎஸ்டி சாலை இருக்கிறது. சென்னையின் எல்லா சாலைகளும் தாம்பரம் பகுதியில் இணைவதால் எப்போதுமே இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பலர் சொந்த வாகனங்களில் சென்னைக்குள் பயணிக்க தொடங்கினார்கள். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் வழக்கத்தை விட ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் அதிகரித்தது. இதுஒருபுறம் எனில், சுதந்திர தின தொடர் விடுமுறை காரணமாக பலர் சென்னையைவிட்டு சொந்த வாகனங்களில் வெளியேறினார்கள். இதன் காரணமாக செங்கல்பட்டு மார்க்க சாலையிலும் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏறி வேலைக்கு சென்ற பயணிகள் மற்றும் வெளியூர் சென்ற பயணிகள், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் தாம்பரம் பேருந்துநிலையத்தில் குவிந்தனர். இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. ரயில் நிலையம் முன்பும், தாம்பரம் பேருந்து நிலையம் முன்பும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேருந்துகளுக்காக காத்திருந்த காரணத்தால், பேருந்துகளால் வேகமாக செல்ல முடியவில்லை.
ஆமை வேகத்திலேயே இந்து மருத்துவமனை ஊர்ந்தபடி சென்றன. குரோம்பேட்டை வழித்தடத்தில் குரோம்பேட்டை, பல்லாவரம் வரையிலும் நெரிசல் அதிகமாகவே இருந்தது.. மின்சார ரயில்கள் ரத்தால் வழக்கத்தைவிட பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது.
சென்னையில் இருந்து செல்லும் விழுப்புரம் - தாம்பரம் (06028), விழுப்புரம் - மேல்மருவத்தூர் (06726), மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை (06722), புதுச்சேரி - சென்னை எழும்பூர் (06026), சென்னை எழும்பூர் - புதுச்சேரி (06025), சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் (06721), மேல்மருவத்தூர் - விழுப்புரம் (06725), தாம்பரம் - விழுப்புரம் (06027) ஆகிய ரயில்கள் வரும் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் சென்று வந்த மக்களும் பேருந்துகளில் செல்ல தாம்பரத்தில் குவிந்திருந்தார்கள்.இதுவும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. பகலில், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையிலும், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.ஆகஸ்ட் 18ஆம் தேதி பிற்பகல் முதல் அனைத்து மின்சார ரயில்களும் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்பதால், அதன்பிறகே தாம்பரத்தில் இயல்பு நிலை திரும்பும்.












Click it and Unblock the Notifications