ஜிஎஸ்டி சாலை முழுக்க டிராபிக்.. சென்னை ஏர்போர்ட் போகவே சிரமப்பட்ட பயணிகள்.. உடனே உதவிக்கு வந்த ஏர்லைன்ஸ்
சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த அதீதக் கூட்டம் திடீரென ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதன் காரணமாகச் சரியான நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை மிகவும் டிராபிக் அதிகம் இருக்கும் நகரங்களில் ஒன்று. எதாவது ஒரு சின்ன இடத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் அது சிலந்தி வலைப்பின்னல் போல மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அப்படித் தான் சென்னை பல்லாவரத்தில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தால் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி சாலையும் ஸ்தம்பித்துப் போய்விட்டது.

ஜிஎஸ்டி சாலையில் டிராபிக்
இன்று காலை முதலே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. முதலில் பல்லாவரம் பகுதியில் டிராபிக் ஏற்பட்ட நிலையில், பிறகு அப்படியே ஜிஎஸ்டி சாலை முழுக்க அதிகரித்தது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன. நத்தை வேகத்திலேயே வாகனங்கள் நகர்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் கல்லூரி பேருந்து ஒன்று மோதியதே இதற்குக் காரணமாகும். இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்தே இதே நிலை தான் இருக்கிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
தற்காலிகப் பாதை
எப்போதும் பல்லாவரம் மேம்பாலத்தில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டும். விபத்தைத் தொடர்ந்து பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. தாம்பரம், பல்லாவரம் உட்படப் புறநகர் இருந்து சென்னை ஏற்போர்ட் விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் மட்டும் வானங்கள் அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் நகரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. மேம்பாலத்தின் கீழே மட்டும் இந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிகக் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிமீ தூரத்திற்கு ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்வோர் சிரமத்தைச் சந்தித்தனர். இப்போது பிற்பகலுக்கு மேல் தான் டிராபிக் மெல்ல சீராகி வருகிறது.
சென்னை விமான நிலையம்
அதேநேரம் டிராபிக் காரணமாக விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பயணிகளால் சரியான நேரத்தில் ஏர்போர்ட் செல்ல முடியவில்லை. இதனால் விமானங்களைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பயணிகள் சிரமத்தைக் கருத்தில் கொண்டு விமானங்கள் அனைத்தும் சற்று நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டன.
டிரைவர் மீது நடவடிக்கை
மறுபுறம், பேருந்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்லாவரம் மேம்பாலத்தில் தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநர் உதயா என்பது தெரிய வந்தது. மேலும், விசாரணையில் அவர் விபத்தை ஏற்படுத்திய போது மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications