ரேஷன் அட்டை + வாரிசு சான்றிதழ் வரட்டுமே.. சொத்து பத்திர நகல்களும் வழங்கப்படுமா? தமிழக அரசு முடிவு?
சென்னை: கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், சொத்து பத்திரங்களின் நகல்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையை உலுக்கிவிட்டுப்போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மழைநீர்: முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எமஎல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
எனினும், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.
வழக்கமாக தாழ்வான பகுதிகளில்தான் மழைநீர் சூழ்ந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடு பகுதிகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் தரைத்தளம் பகுதிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் நீர் புகுந்துவிட்டதால், அவர்கள் மொட்டை மாடிகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர்.
மின்சார சாதனங்கள்: இதனால், பெரும்பாலான வீடுகளில் மின்சார சாதனங்கள், துணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் பாழாகி உள்ளன. இதில், ஏராளமான சான்றிதழ்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு நனைந்து சேதமடைந்துள்ளன.. இதனால், கடுமையாக அச்சம் அடைந்துள்ளனர். எனவே, புயல் வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை மறுபடியும் பெறுவதற்காக, சென்னையில் நாளை முதல் 46 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு,இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்புமுகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
சிறப்பு முகாம்கள்: அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெறநாளை (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது.
அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல, ஏராளமான சொத்து பத்திரங்களும் மழைநீரில் பாழாகிவிட்டதாக கூறப்படுகிறது.. பெரும்பாலும், தரைத்தளங்களே மழைநீரில் மூழ்கிவிட்டதால், உரிமையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகிவிட்டனர். இதனால், எந்தவிதமான பத்திரங்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் கவலை அடைந்துள்ளனர்., எனவே, பத்திரங்களை மீண்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மாற்று பத்திரங்கள்: கடந்த 2015ல் சென்னையில் வெள்ளம் வந்தபோதும், இதுபோலவே பத்திரங்கள் கடுமையாக சேதமடைந்தன.. வீடுகளில் மக்கள் வைத்திருந்த சொத்து பத்திரங்களும் பாழாகிவிட்டதால், வில்லங்க சான்றிதழ் மற்றும் அடையாள சான்றுகள் அடிப்படையில், சான்றிடப்பட்ட பிரதி ஆவணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதற்காகவே சிறப்பு முகாம்கள் முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த முகாம்கள் வாயிலாக, மாற்று பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதுபோலவே, இப்போதும் பத்திரங்களை வழங்க வேண்டும் என்கிறார்கள்.. இது தொடர்பான அறிவிப்பை, பதிவுத்துறை விரைவில் வெளியிடும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications