டெல்டா மாவட்டங்களுக்குப் படையெடுங்கள் மக்களே.. உங்களின் உதவி அம்மக்களுக்கு அதிகம் தேவை
சென்னை: கஜா புயலால் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளன காவிரி டெல்டா மாவட்டங்கள். அங்குள்ள மக்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து உதவிகள் அங்கு பாய வேண்டியது அவசியமாகியுள்ளது.
அரசாங்கத்தின் நிவாரணம் போய்ச் சேர அவகாசம் பிடிக்கும். எனவே அதை எதிர்பாராமல் மக்களே ஒருவருக்கொருவர் கை கொடுத்து தூக்கி விட வேண்டியது முக்கியம், காலத்தின் கட்டாயம்.
2015 வெள்ளத்தின்போது சென்னைக்கு வந்து குவிந்த உதவிகளைப் போல இப்போது காவிரி டெல்டா மாவட்டங்களுக்கும் உதவிகள் குவிய வேண்டும்.

கஜாவால் பாதிப்பு
கஜா புயலால் கடும் பாதிப்பை காவிரி டெல்டா மாவட்டங்கள் சந்தித்துள்ளன. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மிகப் பெரிய பொருட் சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன.
|
தாராள உதவிகள் தேவை
காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. வாழ்வாதாரம் உள்ளிட்ட பலவற்றை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

சின்ன உதவியும் கை கொடுக்கும்
மிகப் பெரிய அளவில் இந்த மாவட்டங்களில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மின் கம்பங்கள் விழுந்துள்ளன. விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பல கடலோர கிராமங்களில் மீனவர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

முடிந்த உதவிகளைச் செய்வோம்
இவர்களுக்குத் தேவையானதை, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டியது நமது இப்போதைய கடமையாகும். எப்படி சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது எங்கெங்கிருந்தோ உதவிக் கரங்கள் நீண்டதோ, அதேபோன்றதொரு உதவியைத்தான் இந்த மாவட்டங்களுக்கு இப்போது செய்ய வேண்டியுள்ளது. உதவுவோம், கை தூக்கி விடுவோம்.

சோறு போட்ட தெய்வங்கள்
காவிரி டெல்டாதான் தமிழகத்திற்கே சோறு போட்ட தெய்வங்கள். அவர்கள் இன்று நிர்க்கதியாகி நிற்கும்போது அடுத்த வேளை சோற்றை எடுத்து மனதார வாயில் வைக்க முடியாத நிலை. காவிரி பாசனப் பகுதி மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது நமது கட்டாயம் மட்டும் அல்ல, கடமையும் கூட.












Click it and Unblock the Notifications