தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை? வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் சாமிநாதன் பரபர
சென்னை: மலையாள சினிமாவில் நடிகைகள் மீதான பாலியல் தொல்லை குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இதுபோல எதாவது கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்குத் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் முக்கிய பதிலை அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து அம்மாநில அரசு கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தது அமைத்தது.

கடந்த 2017இல் பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அங்கே நடிகைகள் பலரும் இதுபோன்ற பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.
ஹேமா கமிட்டி அறிக்கை: அதைத் தொடர்ந்தே மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விசாரிக்க இந்த ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மலையாளத்தில் பல நடிகைகளிடம் நேரில் சென்று விசாரித்து அறிக்கையைச் சமர்ப்பித்தனர். கடந்த 2019 டிசம்பர் 31ம் தேதியே தனது அறிக்கையைக் கேரள அரசிடம் சமர்ப்பித்தது. இருப்பினும், சில காரணங்களால் இந்த ரிப்போர்ட்டை கேரள அரசு வெளியிடாமலேயே இருந்தது. இதனால் கேரள அரசை பலரும் மிகக் கடுமையாகச் சாடினர்.
சட்ட போராட்டத்திற்குப் பிறகு சமீபத்தில் தான் இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதிலும் முழு ரிப்போர்ட் வெளியிடப்படவில்லை. ரிப்போர்ட்டில் இருக்கும் சிலரது பிரைவசி பாதிக்கப்படும் என்பதால் அந்த அறிக்கையின் 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் மலையாள சினிமாவை அதிர வைப்பதாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகர் சங்கத்தினர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
அறிக்கை: இதற்கிடையே மலையாள சினிமாவை போலவே தமிழ்நாட்டிலும் இங்கு சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தத் தமிழக அரசு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது. இதற்கிடையே இது குறித்த கேள்விக்குத் தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் சில முக்கிய பதிலை அளித்துள்ளார்.
அமைச்சர் சாமிநாதன்: திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இதுபோல எந்தவொரு புகாரும் இதுவரை வரவில்லை. அதுபோல புகார்கள் எதாவது வரும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அதிமுக மீது அட்டாக்: தொடர்ந்து பேசிய அவர், "ரஜினி - துரைமுருகன் விஷயம் ஒன்றுமே இல்லை. அவர்கள் நகைச்சுவையாகச் சொன்ன கருத்து அது. ஆனால், தினமும் செய்தியில் வர வேண்டும் என்பதற்காக அதிமுக உதயகுமார் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அவரது பேச்சு எல்லாம் இங்கு எடுபடாது" என்றார்.
மேலும், தமிழ்நாட்டை விட்டுவிட்டு எந்தவொரு தொழிற்சாலையும் வெளி மாநிலத்துக்குச் செல்லவில்லை என்ற அவர், வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications