Flashback: 2017இல் அவைத் தலைவர் பதவியை பறித்த சசிகலா.. பதிலுக்கு மதுசூதனன் செய்த சம்பவம்
சென்னை: 2017ஆம் ஆண்டு தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிமுக அவைத் தலைவர் பதவியை மதுசூதனனிடம் இருந்து பறித்தார் சசிகலா. பதிலுக்கு அவைத் தலைவர் என்ற முறையில் சசிகலாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் மதுசூதனன்.
மதுசூதனனின் உடல்நலம் குறித்து சசிகலா நேரில் விசாரித்த நிலையில் இந்த பிளாஷ்பேக் வைரலாகி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். இதையடுத்து அப்போதைக்கு முதல்வராக ஓ பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர் சசிகலா
இந்த நிலையில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு முன்னர் முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறிய ஓபிஎஸ் திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார்.

இரண்டாக பிரிந்த அதிமுக
இதையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஓபிஎஸ்ஸுக்கு அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து சசிகலா கட்சிக்கு குந்தகம் விளைவித்ததால் அப்பதவியிலிருந்து மதுசூதனனை நீக்கினார். அந்த பதவிக்கு கே ஏ செங்கோட்டையனை நியமித்தார்.

சத்தியம்
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை சசிகலா மீறிவிட்டதாக மதுசூதனன் குற்றம்சாட்டினர். பின்னர் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். அது போல் டிடிவி தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இணைத்ததையும் நீக்கினார் மதுசூதனன்.
Recommended Video

சிறை சென்ற சசிகலா
இதையடுத்து சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னர் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார். மேலும் அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தார் சசிகலா. இந்த நிலையில் மதுசூதனன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை சசிகலா இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications