‘ஆதாயம்’ கிடைக்காம செஞ்சிட்டாரா.. அதான் மோடி எடப்பாடியை பார்க்கலயாம்.. புள்ளி வைக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே நேரம் கேட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு ரத்தானது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அவரை பிரதமர் மோடி சந்திக்காமல் சென்ற நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், "துரோகியின் முகத்தை காண விருப்பமில்லாமல் மோடி கடந்து போயிருப்பது நியாயம் தானே?" எனக் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளா் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஓபிஎஸ் தரப்பின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார். இந்த பயணத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் வாங்கியிருந்தனர். ஆனால் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையுமே தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. விமான நிலையத்தில் பார்த்ததோடு சரி.
பிரதமர் மோடியை வழியனுப்ப சென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் வரை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் காத்திருந்தனர். பிரதமர் மோடியிடம் தனியாகப் பேச அவர்கள் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் நேரமின்மை எனக் காரணம் சொல்லப்பட்டு அந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அவரை பிரதமர் மோடி சந்திக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியை பார்த்து எரிச்சலடைந்த மோடி.. என்ற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "2014 - மோடி வேண்டும் என்று இந்தியாவே தீர்ப்பெழுதிய போது.. தமிழகமோ எங்களுக்கு மோடி வேண்டாம்.. லேடியே போதும் என தீர்ப்பு தந்தது. 2019 - மோடியே நீடிக்க வேண்டும் என இந்தியா தீர்ப்பெழுதிய போது தமிழகமோ மோடி வேண்டாம் என்பதையே திரும்பவும் தீர்ப்பாக்கியது.
2024 - இந்தியாவின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்த முறை மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா என தமிழ்நாட்டு மக்கள் பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே பிரதான கட்சியான அதிமுகவை உடைத்து மோடிக்கு தமிழ்நாட்டில் இருந்து எந்த ஆதாயமும் கிடைக்கக்கூடாது
என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி என்றால்.. அந்த துரோகியின் மூஞ்சியை காண விருப்பமில்லாமல் மோடி கடந்து போயிருப்பது நியாயம் தானே?" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications