இப்படியும் எங்க தலை மேல இருக்கும் கடனை அடைக்கலாமே.. வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் "மக்கள் கணக்கு"!
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதுள்ள ரூ 2.63 லட்சம் கடனை இந்த வழிகளில் எல்லாம் அடைத்து கொள்ளுங்கள் என பொதுமக்கள் கணக்கு போட்டுள்ள தகவல்கள் வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
தமிழகத்தின் கடன் சுமை, எதற்கெல்லாம் நிதி வீணடிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை பிடிஆர் பழனிவேல் விவரித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ 2.63 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

நாமக்கல் காந்தியவாதி
இதை சீரியஸாக எடுத்துக் கொண்ட நாமக்கல் காந்தியவாதி இளைஞர் ஒருவர் ரூ 2.63 லட்சத்திற்கு தமிழக அரசு என்ற பெயரில் காசோலை அட்டையை கோட்டாட்சியர், ஆட்சியரிடம் போய் கொடுத்தார். ஆனால் அவர்கள் வாங்கவில்லை. இந்த சுவாரஸ்யம் முடிவதற்குள் அடுத்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாக்கியில்லா சான்றிதழ்
அதாவது ஒவ்வொரு குடும்பத்தின் மீதுள்ள ரூ 2.63 லட்சம் கடனை தமிழக அரசு அடைப்பதற்கான வழிமுறைகளையும் இந்த கடனை அடைத்த பிறகு தங்களுக்கு NO DUE certificate வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கருத்துதான். இந்த கணக்குகள் எல்லாம் சரியா என்று கூட தெரியவில்லை.

மக்கள் நலனுக்கான திட்டங்கள்
இந்த வைரலாகும் தகவலில் கூறியதெல்லாம் ஏழை எளிய மக்கள் நலனுக்கான திட்டங்கள். அதை கைவிட்டுவிட்டு அரசு எப்படி கடன் அடைப்பு நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்காது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் சமூகவலைதளங்களில் வைரலாகி பலரை நகைப்புக்குள்ளாகிய இந்த கணக்கு வழக்கை நம் ஒன் இந்தியா வாசகர்களும் பார்த்து நகைக்கட்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த செய்தி வெளியிடப்படுகிறது.

வைரலாகும் மக்கள் கணக்கு
வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் தகவல் இதோ...
அன்புள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்களுக்கும்,
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹2,63,967 கடன்.
அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்க்கு ₹2,63,967 கடன். இதை நாங்கள் அடைக்க விரும்புகிறோம்.
1. தமிழக குடும்ப தலைவிகளுக்கு ₹1000 பிரதி மாதம் உரிமை தொகை தருவதாக சொன்னீர்கள். உங்கள் ஆட்சி முழுவதும் அந்த தொகை ₹60,000 (60 மாதம் * ₹1000) எங்களுக்கு வேண்டாம். நீங்களே வைத்து கொள்ளுங்கள். அந்த தொகையான ₹60,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
2. 5 சவரன் நகை கடன் அடைத்து நகையை மீட்டு தரப்படும் என்று சொன்னீர்கள். அதை நாங்கள் சொந்தமாக அடைத்து கொள்கிறோம். அந்த தொகையான ₹1,20,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.(5 சவரன் =40 கிராம்).
40 கிராம் ₹3000 =* ₹1,20,000
3. சமையல் எரிவாயு சிலிண்டர் ( Gas)ஒரு சிலிண்டருக்கு மானியம் ரூ100 தருவதாக சொன்னீர்கள். அந்த தொகை ₹6,000/- (60 மாதம் * ₹100) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
4.பெட்ரோலுக்கு மானியம் ரூ5 / லிட்டருக்கு தருவதாக சொன்னீர்கள்.
ஒரு நாளைக்கு 2 லிட்டர் *₹5 = ₹10 ; ஒரு மாதத்திற்கு
30 நாட்கள் *₹10 = ₹300
60 மாதங்கள் * ₹300 = ₹18,000/-
அந்த தொகை ₹18,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
5. ரேஷன் பொருட்கள் வழியாக மாதம் ஒரு குடும்பத்திற்க்கு ₹500 மானியம் தரப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு 12 * ₹500= ₹6000. அந்த மானியம் எங்களுக்கு வேண்டாம். நிறுத்தி விடுங்கள்.
அந்த தொகை ₹30,000/- (60 மாதம் * ₹500) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
6. மாத மாதம் EB Reading எடுப்பது மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹500 மாதம் மிச்சப்படுத்தலாம். அந்த வகையில் ₹30,000.(60 மாதம் *₹500) மிச்சப்படுத்தலாம்.
ஆக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை EB Reading எடுக்கவும். பிரதி மாதம் எடுக்க வேண்டாம்.
அதில் மிச்சப்படுத்தும் தொகையான ₹30,000/- (60 மாதம் * ₹100) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
1. ₹ 60,000
2. ₹1,20,000
3. ₹ 6,000
4. ₹ 18,000
5. ₹ 30,000
6. ₹ 30,000
--------------------------
₹2,64,000 /-
எங்கள் குடும்பத்தின் கடனை அடைத்து விடுங்கள். மேற்கூறிய எங்கள் அனைத்து உறுதிமொழிக்கும் தகுந்த முறையில் உறுதிமொழி பத்திரம் தயார் செய்து நாங்கள் அதில் கையொப்பம் இட்டு தருகிறோம். நீங்கள் எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு NO DUES Certificate கொடுக்கவும். வருங்காலத்தில் எங்கள் பெயரில் கடன் வாங்க வேண்டாம்.
இப்படி ஒரு தகவல்தான் சமூகவலைதளங்கலில் உலா வருகிறது. இது வைரலும் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications