புத்தாண்டு பார்ட்டி.. குழந்தைகளை அழைத்துச் சென்றால் கடுமையான ஆக்ஷன் எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த செயல் சட்டப்படி தவறானது என்றும், சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், வாழ்க்கையை அழித்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்து உள்ளார்.
மேலும், புத்தாண்டு நெருங்கும் நிலையில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களில் குழந்தைகள் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது எனத் தெரிவித்தது.
மேலும், எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச் செல்வதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications