குண்டு போடவும் தெரியும்.. “இனி அப்படி பேசமாட்டேன்” ட்விஸ்ட் அடித்த கர்னல் பாண்டியன்! ஐகோர்ட் ஜாமீன்!
சென்னை : தமிழ்நாடு அரசை மிரட்டும் விதமாக "எங்களுக்கு குண்டு போடவும் தெரியும்" எனப் பேசிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன், ராணுவ வீரர் கொலையைக் கண்டித்து நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது குண்டு வைப்பதிலும் சுடுவதிலும் சண்டையிடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று மிரட்டல் விடுத்தார்.
தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ராணுவ வீரர் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு மற்றும் திமுக கவுன்சிலரான சின்னசாமி ஆகியோருக்கு இடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியதில், ராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் பா.ஜ.க சார்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ராணுவத்தில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள், எங்களை சீண்டினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார்.

மிரட்டல் பேச்சு
கர்னல் பாண்டியன் மிரட்டல் பேச்சு குறித்து திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். கர்னல் பாண்டியன் சார்பில், இதுபோல மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மன்னிப்பு கேட்டார் - ட்விஸ்ட்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இனி இதுபோல பேச மாட்டீர்களா? என்று மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக கேள்வி எழுப்பினார். அதற்கு கர்னல் பாண்டியன், இனி இதுபோல பேச மாட்டேன் எனறு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications