முதல்வரை இழுத்த வழக்கறிஞர்.. சட்டென பாய்ந்த திமுக தரப்பு.. “நோ பாலிடிக்ஸ்”: நீதிபதி சொன்ன வார்த்தை!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என வழக்கறிஞர் கூறிய நிலையில், இந்த வழக்கில் அரசியலை இழுக்க வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சனாதனத்துக்கு எதிராகப் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர் குமார், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த கோ- வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

திமுக எம்.பி ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, "அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அதிகார பகிர்வு என்பது நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை அல்லது சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்க முடியாது" என்று தெரிவித்தார். மேலும் அரசியல் சாசன மதிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்தான் ஆ.ராசா பேசினாரே தவிர, அரசியல் சாசனத்திற்கு விரோதமாகப் பேசவில்லை என வாதிட்டார்.
இந்து முன்னணியை சேர்ந்த ஒரு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் பதில் வாதம் வைக்கும்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும், சனாதனத்திற்கு எதிரான பேச்சை அவர்கள் மறுக்கவில்லை என்றும், ஓவ்வொரு நாளும் அதை நியாயப்படுத்தி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கவேண்டிய ஓர் அமைச்சர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதன் மூலம் பதவிப் பிரமாணத்தை மீறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தான் எல்லோருக்கும் பொதுவானவர் என கூறும் முதலமைச்சர், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை, தமிநாட்டில் 80 சதவிகித மக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு அரசின் தலைவர் எந்த வாழ்த்தும் சொல்வது இல்லை, மற்ற மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறார் என வழக்கறிஞர் ராஜகோபாலன் தெரிவித்தார். அதற்கு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் ஜோதி ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டிகைகளுக்கும், சிறுபான்மையினரின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதாக விளக்கம் அளித்தனர். மேலும், இந்த வழக்குகளில் சற்றும் தொடர்பில்லாத முதல்வர் குறித்து பேசக்கூடாது என வலியுறுத்தினர். இதனை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், இந்த வழக்கில் அரசியலை இழுக்க வேண்டாம் என மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications