நடவடிக்கை எடுக்க முடியலைன்னா சொல்லுங்க.. இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தனியார் பஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாய் அளவிற்கான வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க இயலாவிட்டால், இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தில் உள்ள பழமையான, பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக டாக்டர் சுப்பராயன் சாலையில் உள்ள 6 ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை சுகவனேஸ்வரா மோட்டார் சர்வீஸ் என்கிற தனியார் போக்குவரத்து நிறுவனம், எந்தவொரு வாடகையும் கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை மீட்கக் கோரி சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை வாடகை பாக்கி 1 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 824 ரூபாயை வசூலிக்கும்படி, கடந்த 2019 மே 14 மற்றும் கடந்த ஜூலை 13 ஆகிய தேதிகளில் மனு அளித்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராதாகிருஷ்ணன் அளித்த மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்க இயலாவிட்டால், இந்த வழக்கு குறித்த பதில் மனுவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியோர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவி்ட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார் நீதிபதி.












Click it and Unblock the Notifications