சிவராத்திரிக்கு யானைகள் ஏன் தூங்காம இருக்கணும்? பரபர வாதம்! ஈஷா யோகா மையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழாவை நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், ஈஷா யோகா மையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு கொண்டாடப்பட உள்ளது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர் கலந்து கொள்ள இருக்கிறார். சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இந்த மகா சிவராத்தி விழாவில் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன.

மகா சிவராத்திரி விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் ஈஷா, மகா சிவராத்திரி விழாவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கோவை செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் என்பவர், ஈஷா யோகா மையத்தில் ஒலி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ஈஷா யோகா மையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல், கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் விடுவதால் கால்நடைகள், மக்கள் பாதிக்கப்படுவதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சிவராத்திரி நாட்களில் பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிவதால் ஒலி, ஒளி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என வாதிட்டார்.
மேலும், சிவராத்திரி நாட்களில் தூங்காமல் இருப்பது அவர்கள் உரிமை, ஆனால், யானைகள் ஏன் தூங்காமல் இருக்க வேண்டும் என்றும் வில்சன் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததா என கேள்வி எழுப்பினர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் பதில் அளித்தார்.
இதையடுத்து, ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவுநீர் அருகேயுள்ள நிலங்களில் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படுகிறதா என ஆய்வு செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு, இந்த மனு குறித்து ஈஷா யோகா மையமும், தமிழக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications