கணக்கு இடிக்குதே.. ரூ.4 கோடியாம்! விசாரிக்க ஓராண்டு தாமதம் ஏன்? அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் குட்டு
சென்னை: தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் நாலு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புகாரளித்து ஓராண்டாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாது ஏன் எனவும் நீதிபதிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து கணக்கில் இருந்த ரூ.4 கோடி செலவு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் விவேக், ஷோபனா மற்றும் அந்த ஊரை சேர்ந்த பூபாலன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் இந்த பஞ்சாயத்திற்கு வருவாய் அதிகம் வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இந்த பஞ்சாயத்து கணக்கில் ரூ.32 கோடி இருந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.4.1 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.
4 கோடி முறைகேடு: அதுவும் மினி மோட்டார்களை பராமரிக்க ரூ.1.49 கோடியும், பைப் லைன்களை பராமரிக்க ரூ.1.27 கோடியும், தெரு விளக்குகளை பராமரிக்க ரூ.78 லட்சமும், அலுவலக செலவுக்கு ரூ.33 லட்சம் என்பது உள்பட ரூ.4.1 கோடியை செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்பு காவல்துறை என்று உயர் அதிகாரிகளுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என்று மனுவில் கூறியிருந்தனர்.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை: இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் பெரும் தொகையை செலவு செய்து உள்ளனர். இந்த செலவு கணக்கை பார்க்கும்போது, இவ்வளவு பெரிய தொகையை பராமரிப்புக்காக செலவு செய்ததற்கு பதில் அந்த பொருட்களையே வாங்கி இருக்கலாம். மிகப்பெரிய முறைகேடு இதில் நடந்துள்ளது. ரூ.4 கோடியை கொள்ளை அடித்துள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை." என்று வாதிட்டார்.
தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு: இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான முத்துக்குமார், புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள், புகார் அளித்து ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இவ்வளவு கால தாமதம் செய்யும்போது ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications