வேறு ஒருவர் நிலத்தில் பொறியியல் கல்லூரி.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: உரிய அனுமதியின்றி வேறு ஒருவரின் இடத்தில் பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதாக எழுந்த புகாரில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்சென்ட். முன்னாள் அமைச்சராகவும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த இவர், வின்ஸ் அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.

அறக்கட்டளை சார்பில், வில்லுக்குறி என்னுமிடத்தில் பொறியியல் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்த கல்லூரிக்காக உரிய அனுமதியின்றி, தனது நிலத்தில் மூன்று மாடி கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும், அதற்கு திருநெல்வேலி நகரமைப்பு துறை உதவி இயக்குனர் நாகராஜன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக, ஜஸ்டின் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2022ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. வின்சென்ட், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். புகார்தாரர் ஜஸ்டின் திமுகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் விரோதம் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் புகார் அளித்துள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதால், வழக்கை நியாயமான முறையில் புலன் விசாரணை செய்ய புலன் விசாரணை அதிகாரியை அனுமதிக்க வேண்டும் எனவும், விசாரணையில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. அதில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வின்சென்ட் தரப்பில் 2002ல் நிலம் வாங்கப்பட்டதாகவும், விசாரணையில் ஜஸ்டின் என்பவரால் 2009ல் வாங்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. மேலும், கட்டட திட்ட அனுமதி 2001ம் ஆண்டே வாங்கியது கூட்டு சதியை உறுதி செய்கிறது.
அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை செய்யலாம் எனவும், சட்டத்திற்குட்பட்டு எந்த நடவடிக்கையும் வின்சென்ட் மீது எடுக்கலாம் எனவும், நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தலையிடாது எனவும் தெரிவித்து வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications