திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ‘சிக்கல்’.. ED-க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
சென்னை: அமலாக்கத்துறை தன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை கூறியதை ஏற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை ஐகோர்ட் ரத்து தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணன், முன்பு அதிமுகவில் இருந்தார். கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கையில் எடுத்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளையும், அவருடைய குடும்பத்தினரின் சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஆகஸ்ட் 7) விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, அமலாக்கத்துறை இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆதலால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம் எனக் கூறி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்கில் தங்களயும் சேர்க்கக் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளது, எனவே அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications