நாங்க வச்சதுதான் சட்டம் என காவல்துறை தெனாவட்டா இருக்கு.. இது என்ன போலீஸ் ராஜ்யமா? - ஐகோர்ட் காட்டம்!
சென்னை: "நாங்கள் வைத்தது தான் சட்டம் என காவல்துறை தெனாவட்டாக செயல்படுகிறது. இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?" என பாலியல் வன்கொடுமை வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்யக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன், வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நேரில் ஆஜரான சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை பார்த்து நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை? பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மாஜிஸ்திரேட், சம்மன் அனுப்பிய போதிலும் அதை போலீசார் திருப்பி அளித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குவதாக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்டவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள் குற்றவாளிகளை கூட இவ்வளவு துன்புறுத்தியதில்லை என குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என எந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர், சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து தெனாவட்டாக செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
சட்டத்தின்படி செயல்படாமல் நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல் துறையினர் செயல்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? எனவும் கேள்வி எழுப்பினார். மாநில அரசும் காவல் துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டம் என குறிப்பிட்ட நீதிபதி வேல்முருகன், இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் வாக்குமூலம் பதிவுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த காவல் துறைக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications