ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் குட்கா கொண்டு சென்ற வழக்கு.. நாளை மறுநாள் ஐகோர்ட் தீர்ப்பு!
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள், சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஜூலை 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டி, ஆட்சி கவிழ்ந்து விடக் கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வாதிட்டார்.
அரசியலமைப்பு சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன என பல்வேறு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார்.
தற்போதைய சட்டமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது எனவும், உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
முந்தைய உரிமைக் குழு தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், தற்போதும் உரிமைக்குழு உறுப்பினராக நீடிப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் தற்போதைய குழுவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, உரிமைக் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் காலாவதியாகலாம். ஆனால் உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாளைக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications