ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ஹேப்பி நியூஸ்: உயர்கல்வி கட்டண உதவித் தொகை அதிகரிப்பு! தமிழக அரசு ஆர்டர்
சென்னை: ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உயர் கல்வி கட்டண உதவித் தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற, பணியாற்றி உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி மற்றும் பட்டப் படிப்பு போன்ற உயர் கல்வி பயில கல்வி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதனை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டண தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற, பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள், தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற உயர்கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021-22 கல்வியாண்டு வரை பட்டப் படிப்புக்கு ரூ.5 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.2,500 என வழங்கப்பட்டது. இந்த தொகை 2022-23 கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் அறிவிப்பின்படி மாநில தேர்வுக்குழு தேர்வு செய்யும் தகுதியுள்ள ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிக்க கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.50 ஆயிரம், தொழிற்கல்வி டிப்ளமோ படிக்க கல்லூரிகளால் நிர்ணயிக்கும் கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.15 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை அளிக்கப்படும்.
இந்த உயர்கல்வி கட்டணத் தொகை, தேசிய ஆசிரியர் நலநிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து மட்டுமே வழங்கப்பட வேண்டும்." என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையால், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு அதிக உதவித்தொகை கிடைக்க உள்ளது.












Click it and Unblock the Notifications