ரூ 800 கோடி மோசடி வழக்கு.. ஜாமீனில் வெளியே வந்த ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
ரூ 800 கோடி மோசடி வழக்கில் கைதான ஹிஜாவு நிர்வாகி தற்கொலை
சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தில் ரூ 800 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிர்வாகி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு 5 கிளை நிறுவனங்களும் இருந்தன. இந்த நிறுவனம் தென்கிழக்காசிய நாடான மலேசியாவில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாக கூறியது.
மேலும் அந்த தொழிலில் கிடைக்கும் வருமானம் மூலம் தமிழகத்தில் வேளாண் தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களது நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாகவும் தெரிவித்தனர். இதை உண்மை என நம்பிய பலர் ஹிஜாவு மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ 800 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.

வட்டி தரவில்லை
ஆனால் அந்த நிறுவனம் பேசிய படி வட்டியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை. இதனால் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அதற்கு அந்த நிறுவன நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

32 இடங்களில் சோதனை
இதில் முதல்கட்டமாக அந்த நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக ஹிஜாவு நிறுவனத்தை சேர்ந்த இயக்குநர்கள், நிர்வாகிகள் என 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் கடந்தாண்டு நவம்பர் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சென்னை வண்ணாரப்பேட்டை காந்தவராயன் தெருவைச் சேர்ந்த நேரு ஜாமீனில் வெளியே வந்தார்.

தலைமறைவு
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சவுந்திரராஜன் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கின் வாய்தாவிற்காக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நேரு சென்றார். இதையடுத்து நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 49. இந்த வழக்கில் 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

12 ஆவது நபர்
இந்த நிலையில் 12 ஆவது குற்றவாளியான நேரு மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தண்டையார்பேட்டை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் நேற்று இரவு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான வேலூரை அடுத்த அலமேலுபுரத்திற்கு இறுதி சடங்கிற்கு உடல் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications