வங்கியில் தினமும் ஓர் 'இந்தி' வார்த்தை.. தமிழ்நாட்டுல இதெல்லாம் தேவையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 'பேங் ஆப் பரோடாவில்' தினமும் ஓர் இந்தி வார்த்தை என்று பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டுவர துடிக்கிறது என்று தமிழக அரசு விமர்சித்து வருகிறது. இந்நிலையில் இந்தி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

'பேங் ஆப் பரோடாவில்' தினம் ஓர் இந்தி வார்த்தை என எழுதப்பட்டிருப்பது பற்றி வழக்கறிஞர் திலகவதி விமர்சித்திருக்கிறார். அவரது பேஸ்புக் பதிவில், "இந்தி சேவை - Bank of Baroda, நுங்கம்பாக்கம், தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இயங்கும் வங்கியில் வேலை பார்க்கும் வங்கி ஊழியர்கள் பலருக்கு தமிழ் பேச தெரியவில்லை. அவர்களுக்கு தான் தினம் ஒரு தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியும் ஆங்கிலமும் தெரியாத தமிழ் வாடிக்கையாளர்களிடம் உரையாட கற்றுக்கொடுக்க வேண்டியது வங்கிக்கு தானே தவிர தமிழர்களுக்கு அல்ல" என்று கூறியுள்ளார்.
வங்கிகளிலும், மத்திய அரசு வங்கிகளிலும் இதுபோன்று தினம் ஓர் இந்தி வார்த்தை என்று எழுதி போடுவது காலங்காலமாக இருக்கும் வழக்கம்தான். இதை ஏன் இப்போது கேள்வி எழுப்புகிறீர்கள்? என சில பழமைவாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வங்கி செயல்பாடுகளில் தமிழகம்தான் தேசத்திற்கே முன்னோடியாக இருந்திருக்கிறது. 1683ம் ஆண்டில் தமிகத்தில் முதல் வங்கி தோன்றியது. மெட்ராஸ் பேங்க் (Madras Bank) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இந்தியாவின் முன்னோடி வங்ககளில் ஒன்று. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இதை நிறுவியது.
அதைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகு வங்கிகள் அதிகரிக்க தொடங்கின. இருப்பினும் 1991ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாராளமயம் மற்றும் உலகமயம் எனும் பொருளதார மாற்றத்தை தொடர்ந்துதான் கிராமங்களிலும் வங்கிகள் விரிவடைய தொடங்கின. தனியார் வங்கிகள் ஆங்காங்கே முளைக்க தொடங்கின.
ஆயினும் வங்கியில் இன்றும் இந்தி மொழிக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருப்பது விமர்சிக்க வேண்டியவை என்று பலரும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியும். ஆங்கிலமும் தெரியும். எனவே வங்கி சேவைகளை அணுகுவதில் பிரச்சனை கிடையாது. ஆனால், கல்வியறிவு பெற முடியாதவர்களும் வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் கூலி, நேரடியாக வங்கி கணக்குக்கு செல்வதால் சாமானிய மக்கள் அதை எடுக்க வங்கியை நாடுகின்றனர்.
இவர்களுக்கு உதவ வங்கி ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களில் பலருக்கு தமிழ் போதிய அளவுக்கு தெரியவில்லை என்று விமர்சனங்கள் அடிக்கடி எழுகிறது. அப்படியெனில் முதலில் அவர்களுக்குதானே தமிழ் சொல்லித்தரப்பட வேண்டும்? தினமும் ஓரு தமிழ் வார்த்தை என்றுதானே பலகையில் எழுதி போட்டிருக்க வேண்டும்? ஆனால் அதற்கு பதிலாக தினம் ஓர் இந்தி வார்த்தை என்று எழுதுவது இந்தி திணிப்பு இல்லாமல் வேறு என்ன?
இங்கு பெரும்பான்மையான மக்கள் தமிழ் மக்கள்தான். அவர்களுக்கு எதுக்கு தினம் ஓர் இந்தி வார்த்தை? இல்லீங்க பலகையில் எழுதியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அல்ல ஊழியர்களுக்கு என்று சொன்னால், தமிழ்நாட்டில் பணியாற்றும் வங்கி ஊழியருக்கு எதுக்குங்க இந்தி? என்று கேள்வி இயல்பாகவே எழுகிறது. இன்னும் எத்தனை காலம்தான் வங்கிகள் இந்த அட்ராசிட்டை தொடரப்போகிறது? என்று சமூக ஆர்வலர்கள் வினா எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications