ரயில் நிலையங்களில் முளைத்த இந்தி.. “அவர்கள் நிறுத்தப்போவதில்லை! நாம் ஓயப்போவதில்லை” - கனிமொழி
சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 75 ரயில் நிலையங்களை, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே துறை புனரமைத்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயில் நிலையங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரயில் நிலையங்களின் புதிய பெயர் பலகைகளில் இந்தி பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்திய ரயில்வேயால் கடந்த 2023-ல் தொடங்கப்பட்ட ஒரு நவீனமயமாக்கல் திட்டம் தான் 'அம்ரித் பாரத்' நிலைய திட்டம். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தரத்தை உயர்த்தி, பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

ரயில் நிலையங்களை வெறும் பயணம் செய்யும் இடமாக மட்டும் பார்க்காமல், ஒரு நகர மையமாக மாற்றுவது இதன் இலக்கு. அதாவது ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தி, அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்தல் இதன் நோக்கமாகும்.
புதிய நடைமேடைகள், கூரை உணவகங்கள் மற்றும் அழகான முன்புற தோற்றம், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், சுத்தமான காத்திருப்பு அறைகள் மற்றும் கழிப்பறைகள், ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், இலவச வைஃபை மற்றும் 5G இணைய வசதி, பிரெய்லி வழிகாட்டி பலகைகள், சாய்வுதளங்கள் போன்ற வசதிகள், அந்தந்த ஊரின் பாரம்பரியம் மற்றும் கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் நிலையங்களை வடிவமைத்தல் என பல மாற்றங்கள் செய்யப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில், சென்னை எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், பெரம்பூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, நாகர்கோவில், தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் என 75 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ரயில்வே துறை மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
ரயில் நிலையத்தின் பழைய பலகைகளில், மேல் பகுதியில் தமிழிலும், நடுவில் ஆங்கிலத்திலும், கடைசியாக இந்தி மொழியிலும் ரயில் நிலையத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தின்படி, மேல் பகுதியில் தமிழிலும், நடுவில் இந்தியிலும், இறுதியில் ஆங்கிலத்திலும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, புதிய பலகைகளில் ஆங்கிலத்திற்கு பதில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக எம்பி கனிமொழி இது குறித்து கூறுகையில், "கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை" என தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications