பாஜகவை முந்திய இந்து முன்னணி! உதயநிதிக்கு எதிராக போராட்டம்- தீக்குளிக்க முயற்சி- உருவபொம்மை எரிப்பு!
சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என முழக்கமிட்ட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்து முன்னணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலையில் அமைச்சர் உதயநிதி உருவபொம்மையை இந்து முன்னணியினர் எரிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் விவாதமும் சர்ச்சையுமாக வெடித்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி, அவருக்கு ஆதரவாக பேசிய ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநரிடம் தமிழ்நாடு பாஜக மனு கொடுத்துள்ளது. அதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்து முன்னணியினர் நேற்று திடீரென உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் இந்தப் போராட்டங்களில் பாஜகவினர் பங்கேற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென அமைச்சர் உதயநிதி உருவபொம்மையை எரிக்க சிலர் முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் இப்போராட்டத்தில் பங்கேற்ற முனுகப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி கிளைச் செயலாளர் கணேசன், திடீரென தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது மனதை புண்படுத்துவதால் தீக்குளிப்பதாக கணேசன் கூறினார். அவரிடம் இருந்த தீப்பெட்டியை பறித்து போலீசார் கைது செய்தனர். ஆரணியில் மொத்தம் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அய்யம்பெருமாள் தலைமை வகித்தார். திருவண்ணாமலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க சிலர் முயற்சித்தனர்.
#சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக, சனாதன தர்மத்தையும், இந்து மதத்தையும் ஒழிப்பேன் என்று பேசிய உதயநிதியை கண்டித்து, #தாரமங்கலம் பஸ் நிலையத்தில் கொட்டும் #மழையில் மாபெரும் கண்டன #ஆர்ப்பாட்டம்..
— Hindu Munnani (@hindumunnani_tn) September 7, 2023
கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில்… pic.twitter.com/8HzSIIwoi4
திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி சார்பாக வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் த.அரசுராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். கோவையில் பொதுச்செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications