இதற்கு தான் பதவியா.. திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்
சென்னை : தமிழகத்தின் பாடநூல் நிறுவனத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கற்றறிந்த அறிஞர்கள் பலரிருக்க கட்சிக்கும், தலைமைக்கும் ஆதரவாக இருந்ததால் பாடநூல் நிறுவனத் தலைவரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் பாடநூல் நிறுவனத் தலைவராக .ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கற்றறிந்த அறிஞர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் பட்டிமன்றத்தில் பேசுகிற தகுதி மட்டுமே கொண்ட ஒரு நபரை பாடநூல் கழக தலைவராக நியமித்திருப்பது வருந்தத்தக்கது.

திமுக பேச்சாளர்
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு பிரச்சாரம் செய்ததும், திமுக கட்சியின் மறைமுக பிரச்சார பிரிவு பேச்சாளர் என்பதனாலும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது ஐயமின்றி தெரிகிறது. லியோனி அவர்கள் பல சமயங்களில் நேரடி கிறிஸ்தவ மத பிரச்சாரகராக செயல்பட்டிருக்கிறார். கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றுபவர் என்பதையும் கடந்து மத வெறியராகவும் இருந்துள்ளார்.

ஆபாசமாக பேசியவர்
பட்டிமன்ற மேடைகளிலும், திமுக பிரச்சார மேடைகளிலும் ஆபாசமாக, அருவருக்கத்தக்க பேச்சுகளை குறிப்பாக பெண்களை இழித்துப் பேசியுள்ளார். இத்தகைய ஒரு நபரை மாணவர்களின் கல்வி சம்பந்தமான துறையில் நியமித்திருப்பது வேதனைக்குரியது.

பாடம் நீக்கம்
மேலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு நன்னெறி புகட்டிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவற்றில் இருந்த "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" போன்ற பல நற்சிந்தனைகளை விதைக்கின்ற பாடங்களை பாடத்திட்டங்களில் இருந்து நீக்கி இருக்கிறது என்பது நினைவில் கொள்ளத்தக்க விஷயம்.

ஒன்றிய அரசு
இந்நிலையில் தமிழக பாடநூல் நிறுவன தலைவராக பொறுப்பேற்ற லியோனி அவர்கள் கொடுத்த பேட்டியில் இந்திய அரசு என்ற இடத்தில் ஒன்றிய அரசு என்பதையே பயன்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். ஆகவே இவரது செயல்பாடு குறித்தும் ஐயம் எழுகிறது.

மறு பரிசீலனை
கட்சிக்கும், தனிப்பட்ட கட்சித் தலைமைக்கும் மிகவும் வேண்டியவர் என்ற வகையில் சிலரை அரசு சார்ந்த பணியில் நியமிப்பது மிகவும் அருவருக்கத்தக்கது. இதனை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே தமிழக அரசு இதனை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி கோருகிறது" இவ்வாறு அறிக்கையில் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications