வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்
சென்னை: முதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா உடல் நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
சென்னையின் அரசியல், புவியியல் மற்றும் கலாசார வரலாறு பற்றிப் பல புத்தகங்களை எழுதியுள்ள வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் இவர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் 1930ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.முத்தையா. இவரது தந்தை பெயர், என்.எம்.சுப்பையா செட்டியார். இவர் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொழும்பு நகர முதல்வராகப் பணியாற்றிய பெருமைமிக்கவர்.
எனவே, எஸ்.முத்தையா கொழும்பில்தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார். இதன்பிறகு அமெரிக்காவில் 1946 முதல் 1951 வரை கட்டிட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் பயின்றுள்ளார்.
புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிக்கைகளான, 'நியுயார்க் டைம்ஸ்', 'சண்டே ஸ்பெஷல்' ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
1951இல் 'டைம்ஸ் ஆஃப் சிலோன்' பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1968ம் ஆண்டு தமிழகம் திரும்பிய முத்தையா, வரலாற்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.
இலங்கை, சென்னை வரலாறு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் இவர் கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. சென்னையின் பழமையை பாதுகாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் எஸ்.முத்தையா.
மெரினா கடற்கரையிலுள்ள பழமை வாய்ந்த டி.ஜி.பி. அலுவலகம் இடிக்கப்படுவதைத் தடுக்க இவர் எடுத்த முன்னெடுப்புகள் சென்னை மக்களால் மறக்கவியலாலது. சென்னையிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை இதழான மெட்ராஸ் மியூசிக்ங்ஸ் இதழின் ஆசிரியராக செயல்பட்டு வந்த நிலையில், இன்று உடல் நலக்குறைவால், எஸ்.முத்தையா காலமானார்.
முத்தையாவுக்கு, ரஞ்சனி மற்றும் பார்வதி என்ற இரு மகள்கள் உள்ளனர். முத்தையா மனைவி, வள்ளியம்மை ஆச்சி, 2013ம் ஆண்டு மறைந்தார்.












Click it and Unblock the Notifications