தேமுதிக பரம்பரையில் ஒரு எம்.பி.. 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பலித்துள்ள நாடாளுமன்ற கனவு!
சென்னை: தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சூழல் கனிந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியில் இருந்து ஒருவர் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்.
தேமுதிகவை கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார் விஜயகாந்த். கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தேமுதிக சார்பில் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதில்லை. கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளிலேயே தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தாலும், டெல்லியில் தனது ஜாகையை அக்கட்சியால் நிறுவ முடியவில்லை.

தேமுதிக
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வென்றிருந்தது. அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது தேமுதிகவுக்கு வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தால் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது தேமுதிகவின் 7 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரித்தனர்.
இதனால் தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்றைய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு தேமுதிக சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா வாய்ப்பும் கிடைக்கவில்லை.
நாடாளுமன்றமே சென்றதில்லை
லோக்சபா தேர்தல்களிலும் இதுவரை ஒரு இடத்தில் வெற்றி பெறவில்லை. இத்தனை ஆண்டு காலமாக எம்.பி பதவி என்பது எட்டாத கனவாகவே இருந்து வந்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல இருக்கிறார் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ். கடந்த ஆண்டே, காலியான ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலின்போது, தேமுதிகவுக்கு அதிமுக சீட் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2026 ராஜ்யசபா தேர்தலில் சீட் தருவதாக கூறினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் 1 ராஜ்யசபா சீட்
இந்நிலையில், தேமுதிக தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து நேற்று, ராஜ்யசபா சீட் ஒதுக்கி அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளார். முதல் முறையாக தேமுதிக சார்பில் ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் செல்ல உள்ளார். தேமுதிக பொருளாளரும், பிரேமலதா விஜயகாந்த்தின் சகோதரருமான எல்.கே சுதீஷ், ராஜ்யசபா உறுப்பினராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.











Click it and Unblock the Notifications