"வெளியே வந்தால்.. தொலைச்சிடுவேன்.." போலீஸ் இருக்கும் போதே மிரட்டல்! மாவுக்கட்டு போட்டும் அடங்கவில்லை
தங்களை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்ததாகவும், அதை பத்திரிகையில் எழுதாவிட்டால் வெளியே வந்து தரமான செயலை செய்துவிடுவேன் என்றும் ரவுடி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான்.
சென்னை: மாமூல் கேட்டு வடமாநில இளைஞரை வெட்டிய ரவுடிகளை சிறைக்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களை அவர்கள் பகிரங்கமாக மிரட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
போலீஸார் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், வெளியே வந்து பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி செல்வதும் அவர்களுக்குச் சட்டத்தின் மீது துளியும் பயம் இல்லாததையே காட்டுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுபோன்ற நபர்கள்தான் பிற்காலத்தில் பெரிய ரவுடிகளாக மாறி சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

வடமாநில இளைஞருக்கு வெட்டு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜா சிங் என்பவர் சாலையோரத்தில் ஹெல்மெட் விற்று வருகிறார். இவரிடம் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான சதீஷ் குமார் (22) மற்றும் ராகேஷ் (23) ஆகியோர் மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு ராஜா சிங், இதுவரை வியாபாரம் ஏதும் ஆகவில்லை.. நாளை மாமூல் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள், ராஜா சிங்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

மடக்கிப் பிடித்த போலீஸ்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு உடனடியாக வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜா சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது ராஜா சிங்கை வெட்டியது சதீஷ் குமார் மற்றும் ராகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மாவுக்கட்டு போட்டும்..
இந்நிலையில், அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்த போது, தங்களிடம் இருந்த கத்தியைத் தர மறுத்து அங்குமிங்கும் ஓடியதால் கீழே விழுந்ததில் அவர்களின் கை லேசாக உடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக மாவுக் கட்டும் போடப்பட்டது. இந்த சூழலில், அவர்களைக் காவல் நிலையத்தில் இருந்து சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்ற போது அங்குப் பத்திரிகையாளர்கள் இருந்தனர்.

பகிரங்க மிரட்டல்
அப்போது அவர்களைப் பார்த்த ராகேஷ் என்ற ரவுடி, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும், போலீஸார் முன்னிலையிலேயே உதைப்பதைப் போலக் காலை தூக்கினான். அதுமட்டுமல்லாமல், தங்களை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்ததாகவும், அதை பத்திரிகையில் எழுதாவிட்டால் வெளியே வந்து தரமான செயலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான். அப்பாவி இளைஞரை வெட்டிய குற்ற உணர்ச்சியும் இல்லாமல், போலீஸார் மீது பயமும் இல்லாமல் ரவுடி செய்த இந்த செயலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications